மழை எங்கள் உயிருக்கு மேல்...

மழையைக் கண்ணில் பார்த்து பல நாள் ஆயிற்று.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஐயாவையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பல நாள் ஆயிற்று. வழக்கமா ஆவணி புரட்டாசி மாதங்களில் பெய்யும் பருவ மழையும் கடந்த வருடம் பெருமளவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டது. பெய்த ஒரு சில இடங்களிலும் கூட இன்றைய தேதியில் வறட்சியே நிலவுகிறது. கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் முன் கூட்டியே கோடையின் தாக்கம் மிகக் கடுமையாகவே உள்ளது. காலை பதினொரு மணிக்கு மேல் வெளியில் இந்த வெயிலில் செல்வது என்பது மிகக் கடினமான செயலே.

பச்சை பசேலென இருந்த புல்வெளிகளையெல்லாம் தற்போது பார்க்கும் போது கண்ணிற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மழை இந்த வருடமேனும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை ஓடிக்கொண்டுதான் உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் பல விவசாயிகள் பலர் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய பாசன அணையான மேட்டூர் அணையானது சென்ற வருடம் நிரம்பினாலும் தற்போது அதில் ஐம்பது அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருப்பதால் இந்த வருட விவசாயத்தின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நம் கண் முன்னே நிற்கிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக தண்ணீர் மட மடவென குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை குறைவாகப் பெய்யினும் கூட கர்நாடகத்தில் கனிசமான மழை இருப்பின் டெல்டா மாவட்டங்களுக்கு எப்படியோ நீர் கிடைத்து விடும்.

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பவானி சாகர் அணை. இந்த அணையிலும் தற்போது நீர் இருப்பு ஐம்பது அடிக்கும் குறைவாகவே உள்ளது. நீர் வரத்தும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதே போல் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும் முக்கிய அணையாக இருப்பது பொள்ளாச்சி ஆழியார் அணை. இதிலும் மற்றவைகளைப் போலவே தண்ணிர் மிகக் குறைவான இருப்பே உள்ளது. இந்த வருடம் மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ள தென்னை மரங்கள் வறலும் நிலை ஏற்படக் கூடும். ஏற்கனவே மழை குறைவின் காரணமாக சில பகுதிகளில் தென்னை வறண்டு காட்சியளிக்கிறது. தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும்.

வருண பகவானுக்கு இணையத்தில் ஒரு கணக்கிருந்தால் அதில் மழை வேண்டி விண்ணப்பங்களே குவிந்து கொண்டிருக்கும். மற்ற பொருள்களை இணையத்தில் வாங்குவது போல் இந்த மழையையும் வாங்கும் விஞ்ஞான நம் கையில் இருந்தால் அணைவரும் கணினியின் முன்னே அமர்ந்து கொண்டு ஆஃபர் விலையில் கிடைக்கிறதா என ஆராய்ச்சி செய்து கொண்டே வாங்க முயற்சித்துக் கொண்டிருப்போம். என்ன செய்ய? இந்த மழைக்காகவேனும் கடவுளை நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. அவரிடம் தான் முறையிட வேண்டியுள்ளது.



மரங்களையெல்லாம் நாம் தான் வெட்டுவோம். புதிதாக ஒரு மரங்கள் கூட நட்டு வளர்க்க மாட்டோம். அவ்வப்போது பெய்யும் மழையையும் கூட மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து சேமிக்க மாட்டோம். இருந்தாலும் அந்தக் கடவுள் மட்டும் மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும் என்று அதற்கே கட்டளையிடுவோம். மழை பொய்த்து விட்டது அதன் மீதே பழியை சுமத்துவோம். ஏனெனில் நாம் மனிதன். ஆறறிவு கொண்டவனாம்.

கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது மழை வந்து சென்றாலும் அது விவசாயம் செழிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரளவிற்காவது தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் என்று மற்றவர்களைப் போலவே நானும் நம்பிக்கொண்டே இருக்கின்றேன்..


கீச்சுகள் 15

*
பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் தாயின் கையில் கைகளை அசைத்தபடியே அழும் பச்சிளம் குழந்தை. பின் இருக்கையில் கொஞ்சம் படபடப்புடனேயே நான்.
*
மன நலம் பாதிக்கப்படுவது மரணத்திலும் கொடுமை. அவர்களை அனாதையாய் விடுவது அதனினும் கொடுமை..
*
சில நெகிழ்வான தருணங்களில் திடமாக உள்ள நெஞ்சமும் திரவமாக மாறுவதின் அடையாளம் தான் கண்ணீர்..


*
மிரண்டு போகும் பயம், மிரள வைக்கும் துணிச்சல் இவை இரண்டுமே இரவில் எளிதில் சாத்தியம்...
*
வென்றே ஆகவேண்டுமெனத்தானே இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்...
*
தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்ல, அந்தக் காரியத்திலே மிகத் தீர்மானமாக இருப்பதும் மிகவும் சிறப்பு..
*
எறும்பின் தாகத்தை எண்ணெய்தான் நன்கு அறியும்..
*
ஒன்றின் கெடுதலிலிருந்து காத்துக்கொள்ள மற்றொன்றைக் கொண்டு வருகிறோம். அதன் கெடுதலை உணர்ந்தும், உணராமலும்...
*
தான் நோய் நொடி இல்லாமல் வாழணும், தன் வியாபாரம் சிறக்கணும் என கடவுளை வேண்டி கடையைத் திறக்கிறான் மருந்து வியாபாரி.
*
சரக்கு என்ற சொல்லை மதுவிற்காகப் பயன்படுத்தும் போதுதான் அந்த வார்த்தை முழுமையடைந்ததாய் உணரும் பல குடிமகன்கள்!
*
பக்கத்து வீட்டுப்பையன் பத்தாம் வகுப்பென்பதால் பலத்த குரலில் படித்துக்கொண்டே இருக்கிறான், கணிதப் பாடத்தையும் சேர்த்து.. #இன்றைய_கல்வி.
*
எந்தக் கடையிலும் கிடைக்கப்பெறாத உத்வேக மருந்து..
-♥ அவள் கடைக்கண் பார்வை
*
பல நிகழ்வுகளைக் கடந்தாலும் நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்க்கை ரதத்தில் பயணிக்கிறோம்..
*
விருப்பமில்லா பொறுப்புகளைத் திணிப்பதன் மூலம் வெறுப்புகள்தான் வேரூன்றி வளரத் தொடங்குகிறது...
*
மனதிற்கு மருந்தாக சிறிதளவேனும் சமாதானம் நித்தம் தேவைப்படுகிறது.
*
பனித்துளிக்குள் பகலவன் பளபளப்பாய்ச் சிரிக்கிறான்., எமன் தானென்று அறியாமல்.
*
குறைந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையே விதிக்கப்படுகிறது கொசுவிற்கு..
*
நிழல் கூட எப்போதும் உன்னுடனேயே வர வேண்டுமென்றால் அது வெளிச்சத்தின் ஒத்துழைப்பால்தான் சாத்தியம்...
*
இங்கிலிஷ் மட்டுமல்ல இங்கிதமும் தெரிஞ்சுக்கணும்...
*
அநாயாசமாக செய்து முடிப்பவனுக்கு அனுபவம் மட்டுமல்ல அவன் வித்தியாசமான அணுகுமுறை கூட காரணமாக இருக்கலாம்.
*
ஔவியம் அழித்தலும் ஆகச்சிறந்த சாதனையே..
*
வாய்ப்பு வாசல் வர வேண்டுமென நினைப்பது ஆசை என வைத்தால், வாயிற்கதவு வரை வர வேண்டுமென நினைப்பது பேராசையே...
*
பண்டிகைகளை அழித்து வெறும் விடுமுறையாய் (மட்டும்) எண்ணி தொலைக்காட்சியில் தொலைக்கிறோம்.
*
அலைபேசியில் ஐந்தாறு மொழிகளில் அநாயாசமாக பேசிக்கொண்டு வருபவரின் அருகில் அவ்வளவு ஒரு அடக்க ஒடுக்கமாக அசைவில்லாமல் நான்.. #பேருந்துப்பயணத்தில்
*

கீச்சுகள் 14

*
வள்ளுவன் போல் நிலைத் தகவல்
வாய்த்தவர்கள் எவரும் இலர்..

*
தற்காலிகப் பதவி, நிரந்தரப் பதவி, பதவி உயர்வு என படிப்படியாக பதவி ஆசைகளும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...
*
நிதானம்:
சாலை, வேலை இரண்டிலும் தேவை...
*
இந்த சுதந்திர இந்தியாவில் எந்திரங்கள் இல்லாமல் மந்திரங்கள் கற்காமல் பல தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் இந்த (அரசு) அதிகாரிகள்...
*
பூட்டு
இது வாயை மூடிக் கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
தன் வேலையச் செய்து கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
*
இது ஒன்றும் புதிதல்ல,
வழக்கமான தவறுகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்..
*
திறமையான (அரசு) அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் ஃபேண்ட்-ல் எங்கெங்கு பாக்கெட் வைத்து தைக்க வேண்டும் என்று..
*
சத்தமே இல்லாமல் வந்து விடுவதாகவும், மகா யுத்தம் நடத்தியே சிதைக்க வேண்டியதாகவும் உள்ளது நம் தொப்பை..
*
ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்.
*
மற்றவர்களை வீழ்த்துவது மட்டுமே வெற்றி என்ற இலக்கை எட்டி விட்டதாக ஆகிவிடாது.
*
அளகின் அலகும் அழகோ அழகு
-ரசிப்பவர்களுக்கு
*
தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை.
*
எதிர்பார்த்த பாதையில் தடைகள் உள்ளது என்பதற்காக பயணத்தையே நிறுத்துவது எவ்வகையில் நியாயம் ஆகும்?
*
ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்
*
பயின்றேதான் அனைத்தையும் சாதிக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் முயன்றாலும் நிறைய சாதிக்கலாம்.
*
கடந்து வந்துவிட்டால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை
*
கைகளிலேயே எட்டிப் பிடித்துவிடும் இலக்கென்று நினைத்தால் அது வானமே என்றாலும் ஏணி எதற்கு?
*
எட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்து விடுவேன்.
அந்த நிலவு மட்டும் என்
கைகளில் சிக்கிவிட்டால்..
*
நடிப்பது, இரட்டை வேடமாய் நடிப்பது என இரண்டுமே சுலபமாய் நடந்து விடுகிறது சினிமாவை விட வாழ்க்கையில்.
*
உணவும் இல்லாமல் ஊட்டச்சத்தும் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர்வதில் சோம்பேறித்தனம் தான் முதலிடமாக இருக்க முடியும்.
*
தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?
*
உயிர் பிரிந்தவனின் கண்ணில் (இறுதியாக) வடிந்திருக்கும் கண்ணீர் அவனுடைய நிறைவேறாத ஆசைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடகக் கூட இருக்கலாம்
*
அநியாயங்களைத் தட்டிக் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தாமலிருங்கள். அது போதும்.
*
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஓரிரு மணித்துளிகளில் ஓராயிரம் உண்மை, பொய்களை உணர்த்தி விடுகிறது.
*

நான் யமனானேன்..


எவன் செய்த கொடுமையாலோ
குடிபெயர்ந்த குருவியொன்று
என் வீட்டுக் கூரையிலே
தன் கூட்டினைத்தான் பின்னி வைத்து

தன் நெஞ்சம் நெகிழ்ந்திடவும்
தன்னினமும் வளர்ந்திடவும்
கருமுட்டையொன்றை அதிலிட்டு
அடைகாத்து வாழ்ந்துவர

அதை நானறியாது குப்பையென்று
குச்சி வைத்து தள்ளிவிட
குப்பென்று விழுந்த முட்டை
பட்டென்று சிதறிவிட

சட்டென்று பறந்த பட்சி
இமைப்பொழுதில் கண் மறைய.,
இப்படியும் நான் யமனானேன்
எருமை வண்டி யேறாமல்.

வைராக்கியமான 'வைக்கம் விஜயலட்சுமி'

வசை பாடும் மனிதர்கள் கூட இதமான இசைக்கு மயங்கியே ஆவார்கள். இசையை ரசிக்காத உயிரினமே இருக்க முடியாதெனலாம். அதிலும் நாம் மனித இனமாயிற்றே. நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா, என்ன? ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் என்று பலவற்றைக் கூற முடியும். அந்தப் பாடலின் இசை, வரிகள், பாடிய விதம், பாடலில் இடம் பெற்ற காட்சிகள் என ஏதாவது ஒன்று நம் மனதை வருடியதாகவோ நமக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ இருக்கும். பல நேரங்களில் நம்மை அறியாமலேயே பயணங்களில், தனிமையில் நமக்கு பிடித்தமான பாடல்களை நம் வாய் முனக ஆரம்பித்து விடுகிறது.

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் படங்கள் மற்றும் பாடல்கள் வெளிவரும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் வெளிவரும் அனைத்துப் பாடல்களையும் சினிமா துறையில் இருப்பவர்களே கேட்பது அபூர்வம் தான். அதனால் சராசரி மக்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்க வாய்ப்புள்ளது என்பதும் தவறே. மிகச்சிறப்பாக வந்த பாடல்கள் கூட சில நேரங்களில் மக்களிடையே வெற்றி பெறாமல் போவதுமுண்டு. இதற்குக் காரணம் மக்களை முழுமையாய் அந்தப் பாடல் வந்து சேராததாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் புதுமுகங்கள் பலரது நடிப்பால் வெளிவரும்/வெளிவந்த படங்களாக இருக்கலாம்.

மிகப்பெரிய போட்டிகள் கொண்ட சினிமா உலகில் மிகச்சாதாரணமாக எந்த ஒரு நபராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். திறமையும் விடா முயற்சியும் தொடர்ந்து போராடும் குணமும் கொண்டுள்ளவர் தான் மிகப் பெரிய சிம்மாசனத்தைத் தொட முடியும்.

அதிலும் முகம் அதிக அளவில் தெரியாத இசைத்துறையில் மிகப் பெரிய இலக்கை எட்டுவது எளிதான செயல் அல்ல. இன்னும் குறிப்பாக பாடகர் முகம் பிரபலமடைவது குறைந்தபட்சம் பத்து வெற்றிப் பாடல்களுக்குப் பிறகுதான். தற்போது வெளிவரும் பெரும்பாலான பாடல்களில் குரலின் ஆதிக்கம் குறைந்து இசையின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பாடலைப் பாடியவர் யாராக இருக்கும் எனக் கணிப்பதும் பெரும் சிரமமே.

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான செல்லுலோய்டு என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்டே காட்டே என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலரது கவனத்திற்கும் வந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறவியிலேயே கண் பார்வையற்றுப் பிறந்தவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிகம் பதிய அவசியப்படாது. அவரது குரலில் இதுவரை வெளிவந்த தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது நம் மனதை பிசக வைக்கிறதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்மூடி ரசித்தால் கண்ணீரையும் வர வைக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.


இவரது குரலில் ஏற்கனவே வெளிவந்த செல்லுலோய்டு மலையாளப் படத்தின் காட்டே காட்டே என்ற பாடல் தமிழில் காற்றே காற்றே என்ற பழனிபாரதியின் வரிகளோடு இவரது குரலால் பாடலாக்கப்பட்டது. அந்தப் பாடல் பலரது மனதையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.


இவரது குரலில் தமிழில் மற்றுமொரு பாடலாக டி.இமான் அவர்கள் இசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் புதிய உலகை புதிய உலகை என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட பின்பு ஏற்பட்ட என் மனதின் நிலையை எந்த வார்த்தைகளாலும் அலங்கரிக்க முடியவில்லை. இதயத்தில் இன்னும் ஒரு ஈரம் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. பலமுறை கேட்ட பின்பும் மீண்டும் மீண்டும் கேட்கவே மனம் நாடுகிறது. உடலும் உடனமர்ந்து கேட்க இசைகிறது. இதற்கும் மேலாக இந்தப் பாடலில் இசையின் தாக்கம் அதிகம் இல்லாமல் இவரது இதமான குரலே மேலோங்கி நிற்கிறது. இந்தப் பாடல் பல தரப்பு மக்களையும் சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.

'புதிய உலகை' பாடலைக் கேட்க மற்றும் தரவிறக்க


இது போன்ற தருணங்களில் விஜயலட்சுமியின் பெற்றோர் தன் மகளுக்காக செய்த ஊக்கம் மிகவும் போற்றுதல் மற்றும் பாராட்டுதலுக்குரியது. உடலில் குறை என்று ஒரு போதும் தன்னை நினைக்காமல் விடா முயற்சி என்னும் வைராக்கியத்தோடு போராடி கோட்டயம் முதல் கோடம்பாக்கம் வரை தன் காந்தக் குரலோடு தன் முகத்தையும் பலர் அறிய வைத்த வைக்கம் விஜயலட்சுமியின் திறமை மென்மேலும் வளர வேண்டும். இவருக்கு கேரள அரசின் விருதுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் விருதுகளும் தேசிய விருதுகளும் உறுதியாக கிடைக்குமென்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்குவிப்போம்..

வாழ்த்துக்களுடன்

தினேஷ்...

‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு

வாசிப்பு என்பது என் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாவல், நாளிதழ், கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, தன்னம்பிக்கை நூல் என எதாவது ஒரு புத்தகத்தை தினசரி குறைந்தது பத்துப் பக்கத்தையாவது வாசித்த பிறகு தான் தூக்கத்திற்கே அடிக்கல் நாட்டுவது என் வாடிக்கையாகிவிட்டது. தினசரி வாசிப்பு என்பதால் ஒரே மாதிரியான புத்தகங்கள் ஒரு வித சலிப்பைக் கொடுக்கலாம் என்பதாலும், தற்போது வெளிவரும் புத்தகங்களின் மலைக்க வைக்கும் விலையாலும் நூலகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் உறுப்பினராக சேர்ந்துள்ள அரசு நூலகங்கத்தில் துறை வாரியாக புத்தகத்தைத் தேடிப் பிடிப்பது என்பதும் ஒரு ஆகச்சிறந்த சாதனையே. நேற்று சில புத்தகங்களை எடுக்கலாம் என்று நூலகத்திற்கு சென்று சிறிது நேரம் தேடிய போது என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் “ஒன்பதாம் திசை. இதற்கு முன்னர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய “ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம் என்ற கிரைம் நாவலை வாசித்தவன் என்பதால் இதுவும் கிரைம் நாவல் வகையைச் சார்ந்திருக்குமோ என்று எண்ணி உள் பக்கத்தைப் புரட்டிய போதுதான் தெரிந்தது இது ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று.

இல்லம் திரும்பிய பிறகு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் ஆசிரியர் ‘மல்லை தமிழச்சி என்று இருந்தது. நான் இது வரை அறிந்திடாத பெயர்தான் அது. ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை என்ற எதையும் வாசிக்காமல் நேரடியாக சிறுகதைக்குள் சென்றேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருப்பது பட்டியலைப் பார்த்ததுமே தெரிந்தது. புத்தகத்தை திருப்பிக் கொடுக்க 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் அனைத்தையும் படித்து விடலாம் என்று எண்ணித்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சிறுகதையே என்னைப் புத்தகத்தில் தன்வசப்படுத்தியது.

தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்து சிறுகதைகளையும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இடைவிடாது வாசித்து முடித்து விட்டேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருந்தாலும் ஒன்றோடொன்று ஒரு துளி கூட தொடர்பில்லாததால் சிறு சலிப்பு கூட ஏற்படாமல் வாசிப்பில் கட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அனைத்து சிறு கதைகளும் நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி, நாம் நேரில் கண்ட என ஏதாவது ஒரு வகையில் நம்மோடு தொடர்புடைய அல்லது நம் சொந்த வாழ்வின் எண்ணங்களின் பிரதிபலிப்பு போலவேதான் அனைத்துக் கதைகளும் இருந்தன. சமூகத்தைப் பற்றி முகத்திலறைந்து சொல்லப்பட்ட உண்மைகள் பல.


பிறகு இறுதியாகவே இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியது எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் என்பதைப் பார்த்தேன். படைப்புத்திறனும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையும் உடையது இவரது சிறுகதைகள். மனிதாபிமானமும் முற்போக்குக் கருத்துகளும் கொண்ட இவரது எழுத்துத்திறமை மேலும் மேலும் வளர்ந்து தமிழிலக்கிய உலகில் இவருக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென வாழ்த்துகிறேனென்றும் எழுதியுள்ளார்.

திரு ஜெயகாந்தன் சொல்வது போல் மல்லை தமிழச்சியின் கதைகளிலிருந்து அவருக்கு சமூகத்தின் மீது தெளிவான பார்வையும், முற்போக்கு சிந்தனையும் உள்ளதென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது நேர்த்தியான எழுத்துக் கோர்வை பாமர மக்களும் எளிதில் படித்து பொருளுணரும் படியான நடையில் உள்ளது. ஒவ்வொரு கதைக்கும் அவர் வாத்தைகளையும், சொற்றொடர்களை உருவாக்கக் கையாண்டுள்ள விதம் அவரது எழுத்தாளுமைக்கு அடையாளம். அனைத்து சிறுகதைகளிலும் யாதார்த்தமே மிகுதி.

வாசித்தபின்பு சமூகத்தின் மீதான அகன்ற பார்வையும் கூரிய தெளிவும் நமக்கும் வருமென்பதில் சந்தேகமில்லை. இந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்ள அட்டைப் படத்திற்காக வெகு நேரம் தேடினேன். எங்கும் கிடைத்த பாடில்லை. இறுதியாக அவரது முகநூல் முகநூல் பக்கதைக் கண்டுபிடித்து அந்தப் பக்கதிலேதான் ஒன்பதாம் திசை அட்டைப் படத்தையும் எடுக்க முடிந்தது.

இப்படியும் ஒரு அமைதியா!!

அவரது முகநூல் பக்கதிற்கு சென்றபோது எனக்கு ஆச்சர்யமும் அதே சமயம் அதிசயமாகவும் இருந்தது. வெறும் இரு வரிகளிலோ அல்லது துளி கூட சுவாரஸ்யம் இல்லாத பதிவுகளை இடுபவர்கள் கூட 5000 நண்பர்கள், 10000-க்கும் மேல் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் வெறும் ‘முன்னூத்தி சொச்ச நண்பர்களையும், நூறுக்கும் குறைவான பின் தொடர்பாளர்களையும் வைந்திருந்தது என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இவரது படைப்புகளான “விடியலே! விழித்தெழு!! (-வாழ்வியல் வழிகாட்டி நூல்), விழியில் நனையும் உயிர் (-கவிதை) , ஒன்பதாம் திசை (-சிறுகதைத் தொகுப்பு ) இந்த மூன்று புத்தகங்களும் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்மா பதிப்பகம் அரங்கு எண் 63 இல் கிடைக்கும் என்று அவர் முகநூலில் எழுதியிருந்த ஒற்றை நிலைத்தகவலை (அதுவும் ஜனவரி 17 அன்று) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அத்தோடு மட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் டிசம்பர் 19, 2013 காலை மலர் சிறப்பு விருந்தினர் பகுதியில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் சில நிலைத்தகவல் எழுதி இருந்தார். இதையும் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது வரை அந்தக் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றியதாகத் தெரியவில்லை.

இவர் “மல்லை தமிழச்சியின்கவிதைகள் என்ற வலைப்பூ ஒன்றையும் வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே வலைப்பூ உலகில் கால் வைத்த இவர் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் பதிவையும் அங்கு எழுதவில்லை. அவரின் வலைப்பூவிற்கு இன்றுவரை ஒரு பின் தொடர்பாளர்கள் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியே. தன்னைப் பற்றி சுயபுராணம் பாடும் மனோ நிலையில் அதிக பேர் உள்ள இந்த உலகில் இப்படியும் ஒரு பெண் எழுத்தாளரா என என்னை மலைக்க வைக்கிறது.

இவரைப் போன்ற எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்துலகிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியதுள்ளது. இப்போது அவருக்குத் தேவை நம்மைப் போன்றவர்களின் தொடந்த ஆதரவும், சிறந்த ஊக்கமுமே. இவரைப் போன்றவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்ற விருப்பம் எனக்குள் உள்ளது.

தொடர்க அவர் எழுத்துப் பணி, வளர்க அவர் தமிழ்த் தொண்டு.


வாழ்த்துக்களுடன்

தினேஷ்..

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்

எப்போதும் போல் அல்லாமல் எனக்கு இந்த வருடம் பொங்கல் மிக்க மகிழ்ச்சியானதாகவே இருந்தது. அதற்குக் காரணம் காங்கயம் தமிழ்ச்சங்கம் மூலம் காங்கயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிதான். இன்னும் கூடுதல் சிறப்பாக நேற்று (15.01.14) மாலை நேர நிகழ்ச்சியில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புப் பேருரை இடம் பெற்றிருந்தது என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஆவணப்பட இயக்குநர் என்னும் ஒற்றை வரியில் மட்டும் கூறிவிட முடியாது. தமிழகத்தில் ஆகச்சிறந்த பேச்சாளர்களில், நான் மிகவும் மனதில் பதிவு செய்து வைத்துள்ள என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்றினால் சமூகத்தில் நடக்கும் அவல நிலைகளை தன் ஆவணப்படம் மூலம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பவர். இவரின் இராமையாவின் குடிசை, என்று தணியும், எனக்கு இல்லையா கல்வி இந்த மூன்று ஆவணப்படங்களும் சமூக நிலைகளை அப்படியே பிரதிபலித்த படங்கள்.

நான் இவரைப் பற்றி அறிந்து கொண்டது திரு.ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் வலைப்பூவில் தான். கடந்த ஆண்டு (2013) ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது பேச்சைக் கேட்டே ஆக வேண்டும் என்ற கூடுதல் ஆர்வம் என்னுள் கலந்துவிட்டது. அந்த விழாவில் அவர் நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரோட்டில் ஆகஸ்டு-2013 ல் உரை ஆற்றிய போது


காங்கயத்தில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை:

நேற்று காங்கயம் கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போது தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட எதையும் சொல்லாமல் நேரடியாக பாவேந்தரின் வரிகளும், சிறப்புரையின் தலைப்புமான தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தலைப்பைப் பெறுமைப்படுத்த பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றி பாரதி எழுதிய பாடல் ஒன்றினைச் சொல்லி தன் உரையைத் தொடங்கினார். இவர் பேச ஆரம்பித்தது முதலே பேச்சில் கருத்தாழம் மட்டுமல்ல நகைச்சுவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதை எளிதில் உணர முடிந்தது.

உலகில் 6000 பேச்சு மொழிகள் உள்ளன. அதில் 130 முதல் 140 மொழிகளே எழுத்து வடிவம் பெற்றுள்ளன. அதிலும் மிகவும் பழமையான மொழிகள் சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே. ஆங்கில மொழி தோன்றி வெறும் 400 வருடங்களே ஆகின்றன. ஆங்கிலம் படிப்பதைத் தவறென்று கூறவில்லை. மாறாக தமிழையும் சரியாக எழுதாமல் ஆங்கிலத்தையும் சரியாக எழுதாமல் இரண்டும் கெட்ட அவல நிலையில் எழுதுவதையும், பேசுவதையும்தான் சொல்ல மனம் கூசுகிறது. தகராறு என்ற வார்த்தையை எழுவதிலேயே இங்கு எத்தனை பேருக்குத் தகராறு இருக்கிறது. சிறிய , பெரிய என்று சொல்லிக் கொள்வதில் வல்லினமும் மெல்லினமும் மறந்து பலவீனம் ஆகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கும் மேல் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கூட இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுவதில்லை.

யாமறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி எழுதி இருக்கிறார் என்றால் வெறும் தமிழை மட்டும் கற்றுக் கொண்டு அவர் இதை சொல்லிவிட முடியாது. எழுத, படிக்க, பேச என மூன்று நிலைகளையும் கற்றுத் தேர்ந்தால் தான் எந்தவொரு மொழியையும் முழுமையாய்க் கற்றுத்தேர்ந்தவன் என்ற நிலையில் உணர முடியும். பாரதி அது போல 9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதனால்தான் அந்த வரிகளை அவரால் சொல்ல முடிந்தது, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவுநத்தைக்கும் சங்கிற்கும் ஈரறிவு, கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்றறிவு. நண்டுக்கும் வண்டுக்கும் நான்கறிவு, விலங்களுக்கு ஐந்தறிவு, ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு என்று மனிதனே வகுத்துக் கொண்டான் என்று அவர் பேசியதும் அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். தன் சிரிப்பான பேச்சின் மூலமும் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் தான் வினைச்சொல்லே தினையையும், பாலையும் கூறுகின்ற அற்புத மொழி. ஒன்றே முக்கால் அடிகளிலே அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ள திருக்குறள் பிறந்தது தமிழ் மொழியில். ஆனால் இன்றைய நிலையில் வழக்காடு மன்றம், வழிபாட்டுக்கூடம் மட்டுமல்ல வகுப்பறையிலும் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். காலம் காலமாய் இருந்து வந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் உள்ள கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதின் மூலம்தான் தமிழன் என்ற அடையாளத்தையும் நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் காக்க முடியும்.

 நேற்று (15.01.14) காங்கயத்தில் உரை ஆற்றிய போது


அம்மா. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர் மெய் எழுத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு அற்புத உணர்வு. இப்படி ஒரு சிறப்பு வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. நாம் கொண்டாடும் பொங்கல் வெறும் பண்டிகையோடு நின்று விடக்கூடாது. அது நம் பண்பாட்டின் அடையாளம். இயன்ற வரை பிறமொழி கலக்காமல் தமிழ் மொழியிலேயே பேசுவோம். தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பரந்த வாசிப்பும்தான் தமிழைக் காக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. பாவேந்தர் போல் தமிழை உயிருடன் ஒப்பிடுவதை விட வேறெந்த கௌரவமும் தமிழுக்கு செய்து விட முடியாது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர். அரங்கிற்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்த பணியினை சிறப்பாக செய்த அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.

உலகம் அறிந்து உணர வேண்டிய படைப்பாளிகளில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வளர்க அவர் தமிழ் மற்றும் சமூகப் பணிகள்..


திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் வலைப்பூ: உண்மை புதிதன்று


நன்றிகளுடன்:

தினேஷ்...