Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

வைராக்கியமான 'வைக்கம் விஜயலட்சுமி'

வசை பாடும் மனிதர்கள் கூட இதமான இசைக்கு மயங்கியே ஆவார்கள். இசையை ரசிக்காத உயிரினமே இருக்க முடியாதெனலாம். அதிலும் நாம் மனித இனமாயிற்றே. நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா, என்ன? ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் என்று பலவற்றைக் கூற முடியும். அந்தப் பாடலின் இசை, வரிகள், பாடிய விதம், பாடலில் இடம் பெற்ற காட்சிகள் என ஏதாவது ஒன்று நம் மனதை வருடியதாகவோ நமக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ இருக்கும். பல நேரங்களில் நம்மை அறியாமலேயே பயணங்களில், தனிமையில் நமக்கு பிடித்தமான பாடல்களை நம் வாய் முனக ஆரம்பித்து விடுகிறது.

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் படங்கள் மற்றும் பாடல்கள் வெளிவரும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் வெளிவரும் அனைத்துப் பாடல்களையும் சினிமா துறையில் இருப்பவர்களே கேட்பது அபூர்வம் தான். அதனால் சராசரி மக்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்க வாய்ப்புள்ளது என்பதும் தவறே. மிகச்சிறப்பாக வந்த பாடல்கள் கூட சில நேரங்களில் மக்களிடையே வெற்றி பெறாமல் போவதுமுண்டு. இதற்குக் காரணம் மக்களை முழுமையாய் அந்தப் பாடல் வந்து சேராததாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் புதுமுகங்கள் பலரது நடிப்பால் வெளிவரும்/வெளிவந்த படங்களாக இருக்கலாம்.

மிகப்பெரிய போட்டிகள் கொண்ட சினிமா உலகில் மிகச்சாதாரணமாக எந்த ஒரு நபராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். திறமையும் விடா முயற்சியும் தொடர்ந்து போராடும் குணமும் கொண்டுள்ளவர் தான் மிகப் பெரிய சிம்மாசனத்தைத் தொட முடியும்.

அதிலும் முகம் அதிக அளவில் தெரியாத இசைத்துறையில் மிகப் பெரிய இலக்கை எட்டுவது எளிதான செயல் அல்ல. இன்னும் குறிப்பாக பாடகர் முகம் பிரபலமடைவது குறைந்தபட்சம் பத்து வெற்றிப் பாடல்களுக்குப் பிறகுதான். தற்போது வெளிவரும் பெரும்பாலான பாடல்களில் குரலின் ஆதிக்கம் குறைந்து இசையின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பாடலைப் பாடியவர் யாராக இருக்கும் எனக் கணிப்பதும் பெரும் சிரமமே.

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான செல்லுலோய்டு என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்டே காட்டே என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலரது கவனத்திற்கும் வந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறவியிலேயே கண் பார்வையற்றுப் பிறந்தவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிகம் பதிய அவசியப்படாது. அவரது குரலில் இதுவரை வெளிவந்த தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது நம் மனதை பிசக வைக்கிறதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்மூடி ரசித்தால் கண்ணீரையும் வர வைக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.


இவரது குரலில் ஏற்கனவே வெளிவந்த செல்லுலோய்டு மலையாளப் படத்தின் காட்டே காட்டே என்ற பாடல் தமிழில் காற்றே காற்றே என்ற பழனிபாரதியின் வரிகளோடு இவரது குரலால் பாடலாக்கப்பட்டது. அந்தப் பாடல் பலரது மனதையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.


இவரது குரலில் தமிழில் மற்றுமொரு பாடலாக டி.இமான் அவர்கள் இசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் புதிய உலகை புதிய உலகை என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட பின்பு ஏற்பட்ட என் மனதின் நிலையை எந்த வார்த்தைகளாலும் அலங்கரிக்க முடியவில்லை. இதயத்தில் இன்னும் ஒரு ஈரம் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. பலமுறை கேட்ட பின்பும் மீண்டும் மீண்டும் கேட்கவே மனம் நாடுகிறது. உடலும் உடனமர்ந்து கேட்க இசைகிறது. இதற்கும் மேலாக இந்தப் பாடலில் இசையின் தாக்கம் அதிகம் இல்லாமல் இவரது இதமான குரலே மேலோங்கி நிற்கிறது. இந்தப் பாடல் பல தரப்பு மக்களையும் சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.

'புதிய உலகை' பாடலைக் கேட்க மற்றும் தரவிறக்க


இது போன்ற தருணங்களில் விஜயலட்சுமியின் பெற்றோர் தன் மகளுக்காக செய்த ஊக்கம் மிகவும் போற்றுதல் மற்றும் பாராட்டுதலுக்குரியது. உடலில் குறை என்று ஒரு போதும் தன்னை நினைக்காமல் விடா முயற்சி என்னும் வைராக்கியத்தோடு போராடி கோட்டயம் முதல் கோடம்பாக்கம் வரை தன் காந்தக் குரலோடு தன் முகத்தையும் பலர் அறிய வைத்த வைக்கம் விஜயலட்சுமியின் திறமை மென்மேலும் வளர வேண்டும். இவருக்கு கேரள அரசின் விருதுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் விருதுகளும் தேசிய விருதுகளும் உறுதியாக கிடைக்குமென்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்குவிப்போம்..

வாழ்த்துக்களுடன்

தினேஷ்...

‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு

வாசிப்பு என்பது என் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாவல், நாளிதழ், கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, தன்னம்பிக்கை நூல் என எதாவது ஒரு புத்தகத்தை தினசரி குறைந்தது பத்துப் பக்கத்தையாவது வாசித்த பிறகு தான் தூக்கத்திற்கே அடிக்கல் நாட்டுவது என் வாடிக்கையாகிவிட்டது. தினசரி வாசிப்பு என்பதால் ஒரே மாதிரியான புத்தகங்கள் ஒரு வித சலிப்பைக் கொடுக்கலாம் என்பதாலும், தற்போது வெளிவரும் புத்தகங்களின் மலைக்க வைக்கும் விலையாலும் நூலகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் உறுப்பினராக சேர்ந்துள்ள அரசு நூலகங்கத்தில் துறை வாரியாக புத்தகத்தைத் தேடிப் பிடிப்பது என்பதும் ஒரு ஆகச்சிறந்த சாதனையே. நேற்று சில புத்தகங்களை எடுக்கலாம் என்று நூலகத்திற்கு சென்று சிறிது நேரம் தேடிய போது என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் “ஒன்பதாம் திசை. இதற்கு முன்னர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய “ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம் என்ற கிரைம் நாவலை வாசித்தவன் என்பதால் இதுவும் கிரைம் நாவல் வகையைச் சார்ந்திருக்குமோ என்று எண்ணி உள் பக்கத்தைப் புரட்டிய போதுதான் தெரிந்தது இது ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று.

இல்லம் திரும்பிய பிறகு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் ஆசிரியர் ‘மல்லை தமிழச்சி என்று இருந்தது. நான் இது வரை அறிந்திடாத பெயர்தான் அது. ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை என்ற எதையும் வாசிக்காமல் நேரடியாக சிறுகதைக்குள் சென்றேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருப்பது பட்டியலைப் பார்த்ததுமே தெரிந்தது. புத்தகத்தை திருப்பிக் கொடுக்க 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் அனைத்தையும் படித்து விடலாம் என்று எண்ணித்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சிறுகதையே என்னைப் புத்தகத்தில் தன்வசப்படுத்தியது.

தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்து சிறுகதைகளையும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இடைவிடாது வாசித்து முடித்து விட்டேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருந்தாலும் ஒன்றோடொன்று ஒரு துளி கூட தொடர்பில்லாததால் சிறு சலிப்பு கூட ஏற்படாமல் வாசிப்பில் கட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அனைத்து சிறு கதைகளும் நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி, நாம் நேரில் கண்ட என ஏதாவது ஒரு வகையில் நம்மோடு தொடர்புடைய அல்லது நம் சொந்த வாழ்வின் எண்ணங்களின் பிரதிபலிப்பு போலவேதான் அனைத்துக் கதைகளும் இருந்தன. சமூகத்தைப் பற்றி முகத்திலறைந்து சொல்லப்பட்ட உண்மைகள் பல.


பிறகு இறுதியாகவே இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியது எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் என்பதைப் பார்த்தேன். படைப்புத்திறனும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையும் உடையது இவரது சிறுகதைகள். மனிதாபிமானமும் முற்போக்குக் கருத்துகளும் கொண்ட இவரது எழுத்துத்திறமை மேலும் மேலும் வளர்ந்து தமிழிலக்கிய உலகில் இவருக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென வாழ்த்துகிறேனென்றும் எழுதியுள்ளார்.

திரு ஜெயகாந்தன் சொல்வது போல் மல்லை தமிழச்சியின் கதைகளிலிருந்து அவருக்கு சமூகத்தின் மீது தெளிவான பார்வையும், முற்போக்கு சிந்தனையும் உள்ளதென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது நேர்த்தியான எழுத்துக் கோர்வை பாமர மக்களும் எளிதில் படித்து பொருளுணரும் படியான நடையில் உள்ளது. ஒவ்வொரு கதைக்கும் அவர் வாத்தைகளையும், சொற்றொடர்களை உருவாக்கக் கையாண்டுள்ள விதம் அவரது எழுத்தாளுமைக்கு அடையாளம். அனைத்து சிறுகதைகளிலும் யாதார்த்தமே மிகுதி.

வாசித்தபின்பு சமூகத்தின் மீதான அகன்ற பார்வையும் கூரிய தெளிவும் நமக்கும் வருமென்பதில் சந்தேகமில்லை. இந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்ள அட்டைப் படத்திற்காக வெகு நேரம் தேடினேன். எங்கும் கிடைத்த பாடில்லை. இறுதியாக அவரது முகநூல் முகநூல் பக்கதைக் கண்டுபிடித்து அந்தப் பக்கதிலேதான் ஒன்பதாம் திசை அட்டைப் படத்தையும் எடுக்க முடிந்தது.

இப்படியும் ஒரு அமைதியா!!

அவரது முகநூல் பக்கதிற்கு சென்றபோது எனக்கு ஆச்சர்யமும் அதே சமயம் அதிசயமாகவும் இருந்தது. வெறும் இரு வரிகளிலோ அல்லது துளி கூட சுவாரஸ்யம் இல்லாத பதிவுகளை இடுபவர்கள் கூட 5000 நண்பர்கள், 10000-க்கும் மேல் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் வெறும் ‘முன்னூத்தி சொச்ச நண்பர்களையும், நூறுக்கும் குறைவான பின் தொடர்பாளர்களையும் வைந்திருந்தது என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இவரது படைப்புகளான “விடியலே! விழித்தெழு!! (-வாழ்வியல் வழிகாட்டி நூல்), விழியில் நனையும் உயிர் (-கவிதை) , ஒன்பதாம் திசை (-சிறுகதைத் தொகுப்பு ) இந்த மூன்று புத்தகங்களும் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்மா பதிப்பகம் அரங்கு எண் 63 இல் கிடைக்கும் என்று அவர் முகநூலில் எழுதியிருந்த ஒற்றை நிலைத்தகவலை (அதுவும் ஜனவரி 17 அன்று) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அத்தோடு மட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் டிசம்பர் 19, 2013 காலை மலர் சிறப்பு விருந்தினர் பகுதியில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் சில நிலைத்தகவல் எழுதி இருந்தார். இதையும் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது வரை அந்தக் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றியதாகத் தெரியவில்லை.

இவர் “மல்லை தமிழச்சியின்கவிதைகள் என்ற வலைப்பூ ஒன்றையும் வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே வலைப்பூ உலகில் கால் வைத்த இவர் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் பதிவையும் அங்கு எழுதவில்லை. அவரின் வலைப்பூவிற்கு இன்றுவரை ஒரு பின் தொடர்பாளர்கள் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியே. தன்னைப் பற்றி சுயபுராணம் பாடும் மனோ நிலையில் அதிக பேர் உள்ள இந்த உலகில் இப்படியும் ஒரு பெண் எழுத்தாளரா என என்னை மலைக்க வைக்கிறது.

இவரைப் போன்ற எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்துலகிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியதுள்ளது. இப்போது அவருக்குத் தேவை நம்மைப் போன்றவர்களின் தொடந்த ஆதரவும், சிறந்த ஊக்கமுமே. இவரைப் போன்றவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்ற விருப்பம் எனக்குள் உள்ளது.

தொடர்க அவர் எழுத்துப் பணி, வளர்க அவர் தமிழ்த் தொண்டு.


வாழ்த்துக்களுடன்

தினேஷ்..

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்

எப்போதும் போல் அல்லாமல் எனக்கு இந்த வருடம் பொங்கல் மிக்க மகிழ்ச்சியானதாகவே இருந்தது. அதற்குக் காரணம் காங்கயம் தமிழ்ச்சங்கம் மூலம் காங்கயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிதான். இன்னும் கூடுதல் சிறப்பாக நேற்று (15.01.14) மாலை நேர நிகழ்ச்சியில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புப் பேருரை இடம் பெற்றிருந்தது என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஆவணப்பட இயக்குநர் என்னும் ஒற்றை வரியில் மட்டும் கூறிவிட முடியாது. தமிழகத்தில் ஆகச்சிறந்த பேச்சாளர்களில், நான் மிகவும் மனதில் பதிவு செய்து வைத்துள்ள என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்றினால் சமூகத்தில் நடக்கும் அவல நிலைகளை தன் ஆவணப்படம் மூலம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பவர். இவரின் இராமையாவின் குடிசை, என்று தணியும், எனக்கு இல்லையா கல்வி இந்த மூன்று ஆவணப்படங்களும் சமூக நிலைகளை அப்படியே பிரதிபலித்த படங்கள்.

நான் இவரைப் பற்றி அறிந்து கொண்டது திரு.ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் வலைப்பூவில் தான். கடந்த ஆண்டு (2013) ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது பேச்சைக் கேட்டே ஆக வேண்டும் என்ற கூடுதல் ஆர்வம் என்னுள் கலந்துவிட்டது. அந்த விழாவில் அவர் நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரோட்டில் ஆகஸ்டு-2013 ல் உரை ஆற்றிய போது


காங்கயத்தில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை:

நேற்று காங்கயம் கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போது தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட எதையும் சொல்லாமல் நேரடியாக பாவேந்தரின் வரிகளும், சிறப்புரையின் தலைப்புமான தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தலைப்பைப் பெறுமைப்படுத்த பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றி பாரதி எழுதிய பாடல் ஒன்றினைச் சொல்லி தன் உரையைத் தொடங்கினார். இவர் பேச ஆரம்பித்தது முதலே பேச்சில் கருத்தாழம் மட்டுமல்ல நகைச்சுவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதை எளிதில் உணர முடிந்தது.

உலகில் 6000 பேச்சு மொழிகள் உள்ளன. அதில் 130 முதல் 140 மொழிகளே எழுத்து வடிவம் பெற்றுள்ளன. அதிலும் மிகவும் பழமையான மொழிகள் சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே. ஆங்கில மொழி தோன்றி வெறும் 400 வருடங்களே ஆகின்றன. ஆங்கிலம் படிப்பதைத் தவறென்று கூறவில்லை. மாறாக தமிழையும் சரியாக எழுதாமல் ஆங்கிலத்தையும் சரியாக எழுதாமல் இரண்டும் கெட்ட அவல நிலையில் எழுதுவதையும், பேசுவதையும்தான் சொல்ல மனம் கூசுகிறது. தகராறு என்ற வார்த்தையை எழுவதிலேயே இங்கு எத்தனை பேருக்குத் தகராறு இருக்கிறது. சிறிய , பெரிய என்று சொல்லிக் கொள்வதில் வல்லினமும் மெல்லினமும் மறந்து பலவீனம் ஆகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கும் மேல் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கூட இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுவதில்லை.

யாமறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி எழுதி இருக்கிறார் என்றால் வெறும் தமிழை மட்டும் கற்றுக் கொண்டு அவர் இதை சொல்லிவிட முடியாது. எழுத, படிக்க, பேச என மூன்று நிலைகளையும் கற்றுத் தேர்ந்தால் தான் எந்தவொரு மொழியையும் முழுமையாய்க் கற்றுத்தேர்ந்தவன் என்ற நிலையில் உணர முடியும். பாரதி அது போல 9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதனால்தான் அந்த வரிகளை அவரால் சொல்ல முடிந்தது, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவுநத்தைக்கும் சங்கிற்கும் ஈரறிவு, கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்றறிவு. நண்டுக்கும் வண்டுக்கும் நான்கறிவு, விலங்களுக்கு ஐந்தறிவு, ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு என்று மனிதனே வகுத்துக் கொண்டான் என்று அவர் பேசியதும் அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். தன் சிரிப்பான பேச்சின் மூலமும் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் தான் வினைச்சொல்லே தினையையும், பாலையும் கூறுகின்ற அற்புத மொழி. ஒன்றே முக்கால் அடிகளிலே அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ள திருக்குறள் பிறந்தது தமிழ் மொழியில். ஆனால் இன்றைய நிலையில் வழக்காடு மன்றம், வழிபாட்டுக்கூடம் மட்டுமல்ல வகுப்பறையிலும் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். காலம் காலமாய் இருந்து வந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் உள்ள கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதின் மூலம்தான் தமிழன் என்ற அடையாளத்தையும் நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் காக்க முடியும்.

 நேற்று (15.01.14) காங்கயத்தில் உரை ஆற்றிய போது


அம்மா. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர் மெய் எழுத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு அற்புத உணர்வு. இப்படி ஒரு சிறப்பு வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. நாம் கொண்டாடும் பொங்கல் வெறும் பண்டிகையோடு நின்று விடக்கூடாது. அது நம் பண்பாட்டின் அடையாளம். இயன்ற வரை பிறமொழி கலக்காமல் தமிழ் மொழியிலேயே பேசுவோம். தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பரந்த வாசிப்பும்தான் தமிழைக் காக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. பாவேந்தர் போல் தமிழை உயிருடன் ஒப்பிடுவதை விட வேறெந்த கௌரவமும் தமிழுக்கு செய்து விட முடியாது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர். அரங்கிற்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்த பணியினை சிறப்பாக செய்த அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.

உலகம் அறிந்து உணர வேண்டிய படைப்பாளிகளில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வளர்க அவர் தமிழ் மற்றும் சமூகப் பணிகள்..


திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் வலைப்பூ: உண்மை புதிதன்று


நன்றிகளுடன்:

தினேஷ்...

2013- இது கடந்து போனாலும் இது போதும்


கடந்த ஆண்டு நினைவுகளை ஒரு வாரம் தாமதமாகவே பதிவிடுகிறேன். இதற்கு வேலைப்பளு, சோம்பேறித்தனம் எனக் காரணம் எது வேண்டுமானாலும் கூறலாம். நான் கடந்து வந்த 2013 ஆம் வருடத்தில் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், நான் சந்தித்த நிகழ்வுகள் பற்றியும் சுருக்கமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். இதில் விடுதலும் இருக்கலாம்.

2013 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு அதற்கு முன் நான் சந்தித்த புத்தாண்டுகளைப் போலவே வழக்கமான ஒன்றாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் பெரிதாய் இந்த வருடத்தில் (2013) நான் என்ன சந்தித்து விடப் போகிறேன்? பெரிதாய் எதைக் கற்றுவிடப் போகிறேன் என்ற எண்ணம்தான் என் மனதில் வடிந்து கொண்டிருந்தது. வழக்கமான நாட்களில் ஒன்றாகத்தான் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டே இருந்தது.

முகநூலில் முன்னர் இருந்தே கணக்கு வைத்திருந்தாலும் அதை படங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்வதற்கும் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தேன். நான்கு மாதத்திற்கு பிறகு தான் எதேச்சையாக திரு. ஈரோடு கதிர் அவர்களின் நட்பில் இணைந்(த்)தேன், பிறகு நான் எப்போதெல்லாம் என் முகநூலைத் திறக்கின்றேனோ அப்போதெல்லாம் அவருடைய பதிவுகள் என் கண்ணில் படாமல் போவதில்லை. அவருடைய பல பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக அவர் இரண்டு மூன்று வரிகளில் எழுதி பதிவிடுவது என்னுள் சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும்.

பிறகு மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் ஆமை போல் நானும் கொஞ்சம் கொஞ்சமாக என் சிறு சிறு பதிவுகளை முகநூல், Twitter, Google+ என அனைத்திலும் பதிய ஆரம்பித்தேன். அதிலிருந்து இன்று வரை தொடர்ந்து இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை மிகவும் பெருமையாகவே நினைக்கின்றேன். புதிதாய் பல நட்புகள், தொடர்பிலில்லாமல் இருந்த பழைய பல நட்புகள் முகநூல்,  Twitter மற்றும் Google Plus மூலமாகவும் கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சியையும் பட்டியலிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மற்றொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் என்னுள் மிதமாக இருந்த வாசிப்பு பழக்கம் இன்னும் மிகையாக மாறி என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன் நிறுவனர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களையுமே சாரும். மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் மிகவும் சிறப்பாக தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற ஈரோடு புத்தகத் திருவிழா மட்டும் இல்லையென்றால் என்னுள் வாசிப்பு விதை தூவப்பட்டிருக்குமா என்று நினைக்கவே ஒரு கணம் மனதில் கனம் உண்டாகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சிறு கலந்துரையாடல் சந்திப்பில் முதன் முதலில் அவருடன் நேரில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கேட்ட அவருடைய நேர்த்தியான பேச்சின் மூலம் இன்னும் அதிகம் அவரால் கவரப்பட்டு அவருடைய பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளை இணையத்தில் தேட என்னுள் ஆர்வம் சற்று அதிகமாகவே தொற்றிக் கொண்டது.இணையத்தில் கிடைத்த அவரது காணொளித் தொகுப்புகளைக் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்து ரசித்து விட்டேன். 01.01.14 அன்று அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும், அவரருகில் அமர்ந்து உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்ததால் அவரின் பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளைப் பார்த்தது பற்றிக் கூறினேன். அவருடைய முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அவ்வப்போது வலைப்பூவில் எழுதி வந்தாலும் முகநூலில் இரண்டு வரிகள் எழுதும் அளவிற்கு வலைப்பூவில் எழுதுவதில்லை என்பதுதான் உண்மை. இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மற்றுமொரு நெகிழ்வான தருணம் என்னவென்றால் மூன்று முறை என் பதிவு (இரண்டு வரி பதிவுகள்) குங்குமம் வார இதழில் வலைப்பேச்சு பக்கத்தில்  இடம்பெற்றதுதான். அந்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தையாலோ அல்லது எழுச்சி மிகு எழுத்துக்களாலோ அளவிட முடியாதது. இந்த நிகழ்வால் என் மனக்குதிரைக்கு இன்னும் கூட தீனி இதனால் கிடைத்ததென்றுதான் சொல்ல முடியும்.

இந்த செயலைச் செய்வதற்கு முதலில் கொஞ்சம் தயக்கமாகவோ இருந்தது. விமர்சனங்கள் நிச்சயமாம வரும் என்று துணிந்தும் வருடத்தின் இறுதியில் முழு மனதாக “Blogger” (!!!) என்று முகநூலில் என் சுய விபரத்தில் பதித்து விட்டேன். புதிய நட்புகள் பல கிடைத்த வருடம், தொடர்பில் இல்லாமல் இருந்த பழைய நட்புகள் மீண்டும் கிடைத்த வருடம், நான் இணையத்தில் எழுத, வாசிக்க ஆரம்பித்த வருடம் அன்று பட்டியலிட்டுக் கொண்டாட வேண்டிய அந்த வருடம் எனக்கு ஒரு பொக்கிஷமே.




காய்ந்த நிலமாய்க் கிடந்த என் மனதை உழவிட்டு என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த இந்த 2013ஆம் வருடம் எப்படியோ கடந்து விட்டதென்றாலும் இத்தனை நினைவுகளை கல்வெட்டாய் என் மனதில் பதித்தமையால் இது போதும்..



இவங்கதான் ரியல் சாம்பியன்ஸ்

தினமும் செய்தித்தாள்களைப் படிக்கும் போது ஏதாவது ஒரு பக்கத்தில் யாரேனும் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பார்த்து விட முடிகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, காதல் தோல்வி, வறுமை, கடன் தொல்லை, தீரா நோய் என ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு காரணம் முன் வைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் கூட இது போன்ற செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது.

அது போலவே நம் அன்றாட வாழ்க்கையில் நாள் தவறாமல் வாகன விபத்துகள் நடந்த செய்தியையும் செய்தித்தாள்களில் வாசித்து விட முடிகிறது. வாரம் இருமுறையேனும் நம் அக்கம் பக்கத்திலேயே ஏதாவது விபத்துகளை நேரில் பார்த்து விடுவதும், மற்றவர்கள் மூலமாக காதால் கேட்டு விடுவதும் இயல்பாகிவிட்டது. விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து நடந்த இடம் பழைய நிலைக்கு திரும்பி விட்டாலும் நாம் அந்த இடத்தைக் கடக்கும் ஒவ்வொரு கணமும் அந்த விபத்துக் காட்சிகள் நம் கண் முன்னே ஓட ஆரம்பித்து விடுகின்றன. சில சமயங்களில் சிறிய விபத்துகளாக இருந்தால் உயிர் இழப்புகள் இல்லாமல் உறுப்புகள் இழப்போடும் அந்த வடுக்களோடும் முடிந்து போனாலும் பல சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுவதும் சாதாரணமாகவே நடந்து விடுகின்றது.

சில நேரங்களில் ஒரு பக்கம் சாலையில் சரியாகவே சென்றாலும் எதிர் வருபவர்களின் அலட்சியத்தால் இரு தரப்பினருக்குமே சேதாரங்கள் ஏற்பட்டு விடுகின்றது. பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு இன்று முக்கியக் காரணமாக இருப்பது குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது தான். விபத்துகள் என்பது கண நேரத்தில் நடந்து விடுவது தான். ஆனாலும் நம்மால் முடிந்த வரை தடுக்கக்கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதில் கடும் விபத்தினை சந்தித்து உயிர் தப்பி, கை கால் என ஏதாவது உறுப்புகளை இழந்து சமூகத்தில் உள்ள சக மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் சில நேரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி மனதில் உள்ள குறைகளை அவர்கள் வெளிக்காட்டாமல் நம்மோடு சக மனிதர்களாக பழகும் போது நமக்கு நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு சற்று கூடவே செய்கிறது. அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் என்பது இருந்தாலும் அவர்கள் நம்மிடம் எந்த உதவியும் கேட்காத தருணங்களில் அவர்கள் சிறந்த முன் உதாரணங்களாக நம் கண் முன்னே தெரிகின்றனர்.

தொலைக்காட்சிகளை குறிப்பிட்ட நேரம் பார்த்தாலும் அதில் வரும் விளம்பரங்களை மற்றவர்களைப் போலவே நானும் அதிகம் விரும்பிப் பார்ப்பதில்லை. சன் டிவியில் இன்று (10.11.13) சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று முன்னரே விளம்பரப்படுத்தியதை நான் பார்க்கவில்லை. இன்று எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டு வரும்போது இந்த நிகழ்ச்சி என் கண்ணில் பட்டது.

வழக்கமாக நான் பார்த்த இது போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் அமர்ந்திருப்பர். ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருப்பார். திறமையை வெளிப்படுத்தும் நபர்களின் திறமையை சிறப்பு விருந்தினர் மட்டும் பாராட்டுவர். ஆனால் நடுவர்கள் மட்டும் அடுக்கடுக்காய் பல காரனங்களைக் கூறி திறமையை வெளிப்படுத்தும் நபரின் மனதை கடப்பாரையால் தாக்குவது போன்று தாக்கி அவர்களில் மனதைப் புண்படுத்தியே தீருவர். சில நேரங்களில் அவர்களை கண்ணீர் வர வைத்தும் ரசிப்பர்.

நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்
இன்றைய நிகழ்ச்சியிலும் அது போலவே நடுவர்களாக நடிகை ரேவதி மற்றும் பட்டிமன்றம் ராஜா அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் அவர்களும் அமர்ந்திருந்தார். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மற்ற நிகழ்ச்சிகளைப் போன்று எதாவது அழ வைக்கும் சம்பவம் நடந்து விடுமோ என்ற சலனம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் நல்ல வேளையாக அப்படி ஏதும் நடக்காமல் இருந்தது என் மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளித்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு (மாற்றுத்)திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தக் காணொளியைக் காணும் போது என் மனம் என்னிடமே இல்லை. நான் ஒரு குழந்தை போலவே மாறி எந்த முழு நிகழ்ச்சியும் கண்டு ரசித்தேன். ஆட்டம், பாட்டம், இசை என எல்லாவற்றிலும் எள்ளளவும் குறை கூறாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

திறமைகளை வெளிப்படுத்திய (மாற்றுத்)திறனாளிகள்

உடலில் குறை இருந்தாலும் மனதில் அதை நினைத்துக் கொள்ளாமல் தங்களையும் ஒரு சராசரி மனிதர்கள் போலவே நினைத்து அவர்கள் அசத்திய ஒவ்வொரு திறமையும் என்னை மிகவும் நெகிழச் செய்தது.
மரணத்தைப் பற்றிய பயமோ, மனதில் தற்கொலை எண்ணமோ உள்ளவர்கள் இவர்கள் போன்றவர்கள் திறமைகளைப் பார்ப்பார்களேயானால் அவர்கள் புது வாழ்க்கை பற்றிய சிந்தனைகளையே நினைப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.

வாழத்துணிந்தவனுக்கு வாழ்க்கை என்பது சவால் அல்ல. கண்டிப்பா இவங்கதான் சாம்பியன்ஸ்....
--------------------------------------


பயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயனளிக்குமா பண்ணைக் குட்டை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாகக் கூட இந்தக் கட்டுரையை வைத்துக் கொள்ளலாம். மழை இவ்வளவு விரைவில் எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நாங்கள் அமைத்திருந்த பண்ணைக் குட்டை முழுவதும் தண்ணீர் நிறைந்தது எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு இயற்கை அளித்த இந்த மழை, கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த அந்த நாட்கள் நிறைவேறியது போல ஒரு மன மகிழ்ச்சி.

மழை நீர் சேகரிப்பு பற்றி பல ஊடகங்கள் வாயிலாக நமது அரசாங்கமும், பல சமூர்க ஆர்வலர்களும் அவர்களால் இயன்ற வரை மக்களிடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் மக்கள் இதை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நாட்களில் மக்கள் குடி நீருக்குக் கூட குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் செல்வதும், தண்ணிரை தொலைவிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நிலையும் உள்ளது. ஆனால் மக்கள் முழு மனது வைத்து மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும். அதனால் நீர் வளமும் உயரும். குடி நீர் பிரச்சினை என்பது நம்மை நெறுங்க முடியாத அளவிற்கு நம்மை நாமே காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அருகாமையில் நிரம்பிய ஏரி ஒன்றின் புகைப்படம்


மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர வைக்க அப்படியொரு அருமையான திட்டம் தான் இந்த பண்ணைக் குட்டை திட்டம். அதிகமாக மழை பெய்யும் நாட்களில் மழை நீர் வீணாக ஆறுகளில் சென்று கலப்பதன் மூலம் மழை பெய்யும் இடங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வது சந்தேகம் தான். மாறாக முடிந்த வரை மழை நீரை அந்தந்த இடத்திலேயே இது போன்று பண்ணைக் குட்டை அமைத்தும் நீரை முழுவதுமாக பூமிக்குள்ளேயே செலுத்தலாம். இதன் மூலம் கிணறுகளும், ஆழ் துளைக் கிணறுகளும் மிக விரைவிலேய பயன் பெறும்.


 நிரம்பிய பண்ணைக் குட்டை


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்கள் ஊரில் பெய்த கன மழையால் நாங்கள் ஏற்படுத்தியிருந்த இந்த பண்ணைக் குட்டை முழுவதும் நிரம்பியது. இதன் காரணமாக அருகாமையில் இருந்த கிணறும், ஆழ்துளைக் கிணறும் இரண்டு நாட்களிலேயே பயன் பெற்றது என்பது நெகிழ்ச்சியான தருணம் தான்.

நாம் நம்முடைய எதிர்கால வாழ்விற்கு பொன், பொருள் சேமித்து வைப்பது மட்டுமல்ல நீரையும் சேமித்து வைப்பது இன்றைய சூழலுக்கு மிக மிக தேவையான ஒன்றே..


--------------------------------

சுற்றுச்சூழலில் நாமும் ஒருவராய்....

டாலருக்கு நிகரான ரூபாயின்  மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி கடும் உயர்வு. அடுத்த பிரதமருக்கு தகுதியானவர் யார். நாட்டில் கொலை, கொள்ளை பெருகி விட்டது. இது போன்ற பல பேச்சுகளை சாதாரண மக்களும் பேசும் வகையில் விஞ்ஞானம் மக்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிகின்றது. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் ஒரு துளி கூட மழை இல்லாமல் பல வகையான மரங்கள் எல்லாம் காய்ந்து விழுகின்றது. குடிநீர் விநியோகம் முறையாகச் செய்ய வேண்டி மக்கள் சாலை மறியல். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் அதன் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வருகின்றதாகவும், உடனே அதற்கு சீல் வைக்கக் கூறியும் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போன்ற பல செய்திகளும் பலதரப்பட்ட மக்களும் எளிதில் வாசிக்கும் விதமாக எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது பக்கங்களில் அன்றாடம் வந்து விடுகின்றது.

காங்கயத்திலிருந்து திருப்பூர் நோக்கி காலை வேளையில் இரு சக்கர வாகனத்திலே பயணம் செய்கின்றேன். பல கனவுகளைச் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கமும், பல ஆசைகளை மனதிலும், கனமான அந்த புத்தக மூட்டையை முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிப் பேருந்திற்காக நிற்கும் மாணவ மாணவிகள் கூட்டம் மறு பக்கமும் கண்ணில் தென்படுகிறார்கள்.

காலை பத்து மணிக்கு திறக்கும் கடைக்காக எட்டு மணிக்கே கடைக்கு அருகாமையில் வந்து, கடைக்காரரின் (டாஸ்மாக்) வருகைக்காக காத்துக் கொண்டிருப்போர் கூட்டமும் எப்பொழுதும் குறைவதே இல்லை. பல விளை நிலங்கள், விலை நிலங்களாக பல வித்தியாசமான பெயர்களில் நகரங்களாகவும் மாறிக்கொண்டு வருவதும் வழக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தங்கள் வீட்டுக் குப்பைகளை ரோட்டோரத்திலும், நொய்யல் ஆற்றின் அருகாமையிலும் கொட்டும் பழக்கத்தையும் மக்கள் எப்பொழுதும் போலவே நமக்கென்ன என்ற மனநிலையோடவே செய்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


அந்தக் குப்பைகள் எல்லாம் அடிக்கின்ற காற்றிற்கு அருகில் உள்ள வீடு, காடு என அனைத்தையும் விட்டு வைக்காமல் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் 80% மக்காத பாலித்தீன் பைகளே அதிகம் உள்ளது. அந்த பாலித்தீன் பைகளின் தன்மைகளைப் பற்றி அரசாங்கம் தன்னால் முடிந்த வரை முன்னர் குறிப்பிட்ட அதே ஊடகங்களில் தான் விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அந்தக் குப்பைகள் எல்லாம் எப்பொழுது அழியும்? எப்பொழுது நம் மக்கள் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள்? சமூகம் என்பதில் தான் நாமும் இருக்கிறோம் என்பதை எப்பொழுது உணர்வார்கள்? என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளப்பட்டன.

உள்ளூர் செய்திகள் முதல் உலக நிகழ்வுகள் வரை ஆராய்ந்து அலசும் நாம் வீணாக எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டாமல், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பது பற்றி நாமே உணர்ந்து செயல்படுதல் தான் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாக இருக்க முடியும்...
.
.

நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...


தமிழ் வலைப்பூக்களைப் பற்றி சென்ற வருடம் வரை எதுவுமே தெரியாத எனக்கு, இந்த வருடம் தான் இந்த வலைப்பூவைப் பற்றியும், அதிலில் நம் சொந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரியும். இருந்தாலும் சென்ற வருடம் எந்த பதிவையும் இடுகின்ற தகுதி எனக்கிருந்ததாக நான் யோசித்தே பார்த்ததில்லை.

இந்த வருடம் எனக்கு கொஞ்சம் முகநூலில் அதிகம் நட்புகள் கிடைத்ததாலும், அவர்களில் அதிக பேர் தமிழில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதையும் கவனித்து நானும் எதேச்சையாக முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து, பிறகு ஈரோடு கதிர் அண்ணன் எழுத்துக்களால் கொஞ்சம் அதிகமாகவே கவரப்பட்டு இந்த வலைப்பூவிற்குள் நானும் வந்தேன். மனக்குதிரை என்றும் தலைப்புமிட்டு எழுத ஆரம்பித்தேன். (இந்தக் குதிரைக்கு கடிவாளம் கிடையாது)

நானும் என் சொந்த எழுத்துகளை மட்டுமே எழுதுகின்றேன். இன்னும் இருபது பதிவுகளைக் கூடவும் தாண்டவில்லை (இதுதான் இருபதாவது பதிவு). ஆனாலும் நான் ஈரோடு புத்தகத் திருவிழா- துவக்க நாள் 03.08.13 என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவை அண்ணன் சதீஸ் சங்கவி அவர்கள் படித்துவிட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், நானும் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். எனக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே ஆச்சர்யம். நான் இது போன்ற விழாவிற்கு தகுதியானவன் தானா என்று மிகவும் யோசித்தேன். இருந்தாலும் என்னை எப்படியோ கண்டுபிடித்து அழைத்த அவருக்காகவே, விளம்பரதாரர்கள் சொல்வது போல் 99 % நான் வருவதாக அப்பொழுதே உத்திரவாதம் அளித்தேன்.

இருந்தாலும் நேற்று வரை கொஞ்சம் இரு மனதாகவே இருந்தேன். சதிஸ் சங்கவி அண்ணின் இந்த விழா தொடர்பான தகவல்களை அவர் வலைப்பூவில் படித்துக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் அதிகமே கவரப்பட்டு இன்று முழு மனதாக விழாவிற்கு செல்வதென்று முடிவும் செய்தேன். சென்னைக்கு சென்றாதாகவும் இருக்கட்டும், விழாவில் கலந்து கொண்டதாகவும் இருக்கட்டுமென்று அண்ணன் சதிஸ் சங்கவி அவர்களிடம் என் வருகையை உறுதி செய்தேன்.

நாளை மனது மாறினானும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று இன்றே இரயில் பயணத்திற்கான முன் பதிவையும் செய்து, மின்னணு பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டேன். நான் சென்னை சென்றது இதுவரை இரண்டு முறை. முதல் முறை நான் கல்லூரி படிக்கும் பொழுது (2008), இரண்டாவது முறை அலுவலக வேலையாக (2010). அதற்கும் மேல் இதுவரை எனக்கும் சென்னைக்கு வேலை இல்லை, என்னாலும் சென்னைக்கும் ஒரு வேலையும் இல்லை.

இந்த விழாவில் சேட்டைக்காரன் அவர்கள் எழுதிய மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற நூலும், சதீஸ் சங்கவி அவர்கள் எழுதிய இதழில் எழுதிய கவிதைகள் என்ற நூலும், மோகன்குமார் அவர்கள் எழுதிய வெற்றிக்கோடு என்ற நூலும் வெளியிடப்போவதாக விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படுள்ளது.





இப்பொழுது தான் மூன்றாவது முறையாக சென்னைக்கு அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்காக (01.09.13) செல்ல இருக்கின்றேன். நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே என்று மதியம் முதல் நிறைய பேரிடம் என் வாய் உளரிக்கொண்டே இருக்கின்றது...

பயனளிக்குமா பண்ணைக் குட்டை???

தலைப்பிலிருந்தே உங்களுக்கு ஓரளவு யோசனை தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்.. இது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் தான். இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டம் பற்றி வீடு தேடி வந்து அரசாங்க அதிகாரிகள் எங்கள் தோட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவிலேயே ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள்.

முதலில் கொஞ்சம் யோசித்த பின், மழை நீரை சேகரிக்கும் திட்டம் தானே, இதனால் நிலத்தடி நீர் மட்டம் தானே பெருகப் போகின்றது என்று நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். திட்டத்தின் மதிப்பீடு ரூ.36000 என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்தே முழு பணியும் செய்து தருகின்றோம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கும் இரண்டு குச்சிகளை நட்டி கயிற்றைக் கட்டி பங்கு பிரித்துத்தான் வேலை செய்வார்களே என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.

திட்டமும் தொடங்கியது. இது குழி பறைக்கும் வேலை என்பதால் நல்ல வேளையாக அந்த அளவு குச்சிகளை நடாமல் அவர்கள் வேலை செய்தது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. இந்த வேலையை மேற்பார்வையிட்டு அவர்களிடம் சரியாக வேலை வாங்குவதற்கும், ஆட்கள் வருகை பதிவு கணக்கை எழுதுவதற்குமாக இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியையும் சிறப்பாக செய்தனர்.


வேலை நடைபெறும்போது பார்வையிடும் என் தந்தை


திட்டமும் ஒரு வாரத்தில் நிறைவு பெற்றது. சராசரியாக 45x45x2 அடி என்ற விகிதத்தில் குட்டையும் அமைக்கப்பட்டது. எப்படி கணக்கு போட்டாலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம் என்று மன நிறைவைப் பெற்றுக் கொண்டோம்.

திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறியது. எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது தான் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் வானம் பார்த்த பூமியாகவே உள்ள எங்கள் தோட்டத்திற்கும் வருணன் வழி விடுவான் என்று நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.

கலைஞர் ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்பட்டது, அம்மா ஆட்சியில் எங்களுக்காக ரூ.36000 செலவு செய்யப்பட்டுள்ளது. (JCB விட்டு வேலை செய்திருந்தால் 5000 தானே ஆகியிருக்குமென்று யாரும் கேட்டு விடாதீர்கள்.)

ஏழு கோடிக்கும் மேல் வாழும் இந்த தமிழகத்தில், எங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இவ்வளவு செலவு செய்திருப்பது அதிசயம் கலந்த ஆச்சர்யமும் தான். ஆகையால் முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் முதலமைச்சருக்கும் லட்சோப லட்ச நன்றிகள்.. 

ஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....

கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி (19.06.13) காலை 6 மணிக்கு ஊட்டி நண்பர் கணேஷ் அவர்களின் தம்பியின் திருமணத்திற்குச் செல்ல ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் நிறைய பேர் ஒரு டிராவல்ஸ் வண்டிக்கு அளவாகப் புறப்பட்டுக் கிளம்பினோம். கொஞ்சம் தைரியமாகவே எந்தவித பாதுகாப்புக் கருவிகளையும் (போர்வை, சால்வை போன்ற) எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

ஆனால் அதற்கு முதல் நாள் இரவே ஊட்டியில் பலத்த காற்று, மழை என்ற செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தாலும் மனதை ஒருவித தைரியமாக ஆக்கிக் கொண்டு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

மேட்டுப்பாளையம் செல்லும் வரை எந்தவித மேடு, பள்ளம் இல்லாத சாலை என்பதாலோ, புறப்பட்ட பிரியம் என்பதாலோ எங்கள் வண்டியின் ஓட்டுநர் மிக விரைவாகவே மேட்டுப்பாளையம் ஓட்டி வந்துவிட்டார்.. அங்கு தேநீர் பருகிவிட்டு அப்படியே எங்கள் பயணம் மலை மேலே செல்ல ஆரம்பித்தது.

என் மனது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. அதுவும் வளைவுகளில் கொஞ்சம் அதிகமாகவே படபடத்தது. இருந்தாலும் மிகப் பெரிய தைரியசாலியவே முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு, இருக்கையில் அசையாமலேயே அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக நீண்ட நேரத்திற்குப் பின் 9 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தோம். அங்கு வண்டியை நிறுத்தாமல் ஊட்டி நோக்கி பயணம் தொடர்ந்தது. 10 மணிக்குள் சென்று திருமண முகூர்த்தத்தைப் பார்த்து விடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தோம்..

ஆனால் வழிகளில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அதனால் மேலும் தாமதம் ஆனது. அப்பொழுது என்னுடைய 6-ஆம் வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து அடிக்கடி சொன்ன உனக்குத் தான் கணக்கு நல்லா வராதே என்ற வாக்கியம் என் மனதில் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது.

எப்படியோ அந்த நண்பரின் ஊரான ஊட்டி-சோலூர் என்ற இடத்திற்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.. திருமண வீட்டிற்கு வந்ததும் நாங்கள் எப்பொழுது திருமணத்திற்குச் சென்றாலும் தவறாமல் செய்யும் அந்த கும்பிடும் பழக்கத்தைச் செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு ரொம்பவும் புதிய முறைபோல் உணர்ந்ததை எங்கள் மனது புரிந்து கொண்டது. அதனால் மேற்கொண்டு அது போல் செய்வதை நிறுத்திக் கொண்டோம்..
திருமண வீட்டின் முன்பு


அங்கு என்னையும், தோழர்களையும் நண்பர் கணேஷ் நன்றாக வரவேற்று, ஊட்டிக்குப் பெயர் போன வருக்கியையையும், மற்ற சில பலகாரங்களையும் கொடுத்து நன்றாக தமிழர் முறைப்படி உபசரித்தார்.. 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் முகூர்த்தம் முடிந்தது என்றும் தெரிவித்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் அவர் இல்லத்திலேயே நடைபெற்றது என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது.
மணமகனுடன் நான்


அதன் பிறகு நடந்த சம்பர்தாயங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அங்கு அவர்கள் ஊர் சமுதாயக் கூடத்தில் பரிமாறிய உணவினையும் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளைக்கும், மனப்பெண்ணுக்கும் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அங்கு இருந்து விடை பெற்றோம்.

ஊட்டி வந்தது வந்து விட்டோம், அப்படியே சிறிய சுற்றுலாவாக தாவரவியல் பூங்காவிற்கு சென்று வருவோம் என்று ஒரு சில பேர் சொல்ல, போலாமே என்று புன்னகையான பதிலும் வர அப்படியே அங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வீடு நோக்கி எங்கள் வண்டியைக் கிளப்ப, இந்த இனிதான பயணம் இனிதே நிறைவு பெற்றது.. கடைசி வரை கடும் குளிரும், மழையும் வராமல் இருந்தது இதில் மிகப் பெரிய சிறப்பம்சம்.


இது வரை சுற்றுலாவகவே ஊட்டி சென்று கொண்டிருந்த எனக்கு இந்தப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது..

ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது??!!?


பெரிய மழை பெய்வதற்கு முன் ஆகாயமே அதிர இடி வருகின்றதோ இல்லையோ, டீ குடி, டீ குடி என்று காலை 11 மணி ஆகி விட்டால் போதும் உடலில் எங்கிருந்துதான் சுற்றறிக்கை வருகின்றதென்றே தெரியவில்லை. அதைக் குடித்த பிறகுதான் வேறு வேலையையே பார்க்க மனம் ஒத்துழைக்கிறது..

நேற்றும் வழக்கம்போல் டீ குடிக்க வழக்கமாகச் செல்லும் கடைக்கே சென்றேன். பூக்களை உதிரி விட்டால் போல் ஈக்களும், FM-ல் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற விஜய் நடித்து வெளிவர இருக்கும் தலைவா படத்தின் பாடலும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு என்னை இனிதாய் (!) வரவேற்றன.

டீக்கடைக்கே உரித்தான வடைக்கு ஜோடியாய் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் அந்த வெட்டிய செய்தித்தாளை வடையோடு ஒட்டி எடுத்துக் கொண்டு அக்கா... ஒரு டீ.... என்று ஒரு டீயையும் ஆர்டர் செய்துவிட்டு, பல அரசியல் வாதிகள் ஆக வேண்டிய ஆட்கள் அமருகின்ற அந்தப் பெஞ்சில் நானும் அமர்ந்தேன்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக உலக செய்திகள் வரை மக்கள் அறித்துகொள்ள வேண்டுமென்றோ, இதைப் படிக்கின்ற சாக்கிலாவது இரண்டு டீ, வடை வியாபாரம் ஆகுமென்றோ டீக்கடைக்காரர்கள் தங்கள் கடையில் வைக்கப்பட்டிருக்கும் தினசரி நாளிதழை நான் இறுதி பக்கத்திலிருந்து முதல் பக்கம் வரை புரட்ட ஆரம்பித்தேன்.

அங்கு அந்த டீக்கடைக்காரர் (நான் டீ ஆர்டர் செய்த அக்காவின் கணவர்) அருகினில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவரை நாற்காலியில் அமர்த்திக் கொண்டு எதையோ பேசுவது போல் எனக்குத் தெரிந்தது. இவர் உசிலைமணி போல் இருந்ததால் அவர் அருகில் இருந்தவரை நன்றாகப் பார்க்கவே முடியவில்லை. ஏதோ உறவினர் வந்து உள்ளார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பது போல் தெரிந்தாலும் அந்தக் கடைக்காரர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவினர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து ஒரு சத்தத்தையும் காணவில்லை.. ஆனால் மாறாக அவர் கேட்பவைகளுக்கு அவரின் மனைவியிடம் இருந்து கொஞ்சம் உரக்கமாவே பதில் வந்தது. அரசல் புரசலாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என் கையில் இருந்த வடையும் தீர, அந்த அக்கா என் அருகில் உள்ள பெஞ்சில் டீயை வைத்து விட்டு ஏப்பா.... இந்தா.... டீ... எடுத்துக்கோ... என்று சொன்ன பாணியிலேயே, அந்த கணவன் மனைவிக்குள் கொஞ்சம் சண்டை என்று சுதாரித்துக் கொண்டேன்..

ஆனால் இறுதி வரை அந்த மூன்றாவது ஆள் எதற்கு அங்கு வந்திருக்கின்றார், ஏன் பேசவே இல்லை என்ற கேள்வி ஒரு பக்கமாக என் மூளையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவருடைய திருமுகத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், என் கையில் இருந்த டீயும் முடிய, என் ஆறடி உடலை அப்படியே எழுப்பி, இன்னும் கொஞ்சம் காலால் உந்தி அரை அடி சேர்த்து கொஞ்சம் கழுத்தை உயர்த்தி எட்டிப் பார்த்தேன்.. அந்தக் கணப் பொழுதில்

லொல்....... லொல்....... லொல்...... லொல்......

என்று சத்தம் காதைக் கிழித்தது. கொஞ்சம் கண்ணைத் தேய்த்து நன்றாக உத்துப் பார்த்தால்தான் தெரிந்தது, அது  வெள்ளை நிறத்தில் பொசு பொசுவென்றிருந்த பொமரேனியன் நாய்.. அந்த நாயைப் பார்த்து என் மனதில் கேட்டுக் கொண்டேன் ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது, என்னைப் பார்த்ததற்கு அப்புறம் தான் பேசனுமா (!)??? .



பிறகு அந்த டீ, வடை இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டு கடையை விட்டு நடையைக் கட்டினேன். நிறைய கணவன் மனைவி சண்டை பார்த்த எனக்கு இந்தச் சண்டை கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது..

இந்த நிகழ்வில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அந்தக் கடைக்காரர் அந்த நாயை நன்றாக சலவை செய்ததோடு (!), கடைக்குள்ளேயே ஒரு நாற்காலியில் அமர வைத்தது, அதோடு உரையாடியதும்தான்...