Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

வைராக்கியமான 'வைக்கம் விஜயலட்சுமி'

வசை பாடும் மனிதர்கள் கூட இதமான இசைக்கு மயங்கியே ஆவார்கள். இசையை ரசிக்காத உயிரினமே இருக்க முடியாதெனலாம். அதிலும் நாம் மனித இனமாயிற்றே. நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா, என்ன? ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் என்று பலவற்றைக் கூற முடியும். அந்தப் பாடலின் இசை, வரிகள், பாடிய விதம், பாடலில் இடம் பெற்ற காட்சிகள் என ஏதாவது ஒன்று நம் மனதை வருடியதாகவோ நமக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ இருக்கும். பல நேரங்களில் நம்மை அறியாமலேயே பயணங்களில், தனிமையில் நமக்கு பிடித்தமான பாடல்களை நம் வாய் முனக ஆரம்பித்து விடுகிறது.

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் படங்கள் மற்றும் பாடல்கள் வெளிவரும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் வெளிவரும் அனைத்துப் பாடல்களையும் சினிமா துறையில் இருப்பவர்களே கேட்பது அபூர்வம் தான். அதனால் சராசரி மக்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்க வாய்ப்புள்ளது என்பதும் தவறே. மிகச்சிறப்பாக வந்த பாடல்கள் கூட சில நேரங்களில் மக்களிடையே வெற்றி பெறாமல் போவதுமுண்டு. இதற்குக் காரணம் மக்களை முழுமையாய் அந்தப் பாடல் வந்து சேராததாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் புதுமுகங்கள் பலரது நடிப்பால் வெளிவரும்/வெளிவந்த படங்களாக இருக்கலாம்.

மிகப்பெரிய போட்டிகள் கொண்ட சினிமா உலகில் மிகச்சாதாரணமாக எந்த ஒரு நபராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். திறமையும் விடா முயற்சியும் தொடர்ந்து போராடும் குணமும் கொண்டுள்ளவர் தான் மிகப் பெரிய சிம்மாசனத்தைத் தொட முடியும்.

அதிலும் முகம் அதிக அளவில் தெரியாத இசைத்துறையில் மிகப் பெரிய இலக்கை எட்டுவது எளிதான செயல் அல்ல. இன்னும் குறிப்பாக பாடகர் முகம் பிரபலமடைவது குறைந்தபட்சம் பத்து வெற்றிப் பாடல்களுக்குப் பிறகுதான். தற்போது வெளிவரும் பெரும்பாலான பாடல்களில் குரலின் ஆதிக்கம் குறைந்து இசையின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பாடலைப் பாடியவர் யாராக இருக்கும் எனக் கணிப்பதும் பெரும் சிரமமே.

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான செல்லுலோய்டு என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்டே காட்டே என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலரது கவனத்திற்கும் வந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறவியிலேயே கண் பார்வையற்றுப் பிறந்தவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிகம் பதிய அவசியப்படாது. அவரது குரலில் இதுவரை வெளிவந்த தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது நம் மனதை பிசக வைக்கிறதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்மூடி ரசித்தால் கண்ணீரையும் வர வைக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.


இவரது குரலில் ஏற்கனவே வெளிவந்த செல்லுலோய்டு மலையாளப் படத்தின் காட்டே காட்டே என்ற பாடல் தமிழில் காற்றே காற்றே என்ற பழனிபாரதியின் வரிகளோடு இவரது குரலால் பாடலாக்கப்பட்டது. அந்தப் பாடல் பலரது மனதையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.


இவரது குரலில் தமிழில் மற்றுமொரு பாடலாக டி.இமான் அவர்கள் இசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் புதிய உலகை புதிய உலகை என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட பின்பு ஏற்பட்ட என் மனதின் நிலையை எந்த வார்த்தைகளாலும் அலங்கரிக்க முடியவில்லை. இதயத்தில் இன்னும் ஒரு ஈரம் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. பலமுறை கேட்ட பின்பும் மீண்டும் மீண்டும் கேட்கவே மனம் நாடுகிறது. உடலும் உடனமர்ந்து கேட்க இசைகிறது. இதற்கும் மேலாக இந்தப் பாடலில் இசையின் தாக்கம் அதிகம் இல்லாமல் இவரது இதமான குரலே மேலோங்கி நிற்கிறது. இந்தப் பாடல் பல தரப்பு மக்களையும் சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.

'புதிய உலகை' பாடலைக் கேட்க மற்றும் தரவிறக்க


இது போன்ற தருணங்களில் விஜயலட்சுமியின் பெற்றோர் தன் மகளுக்காக செய்த ஊக்கம் மிகவும் போற்றுதல் மற்றும் பாராட்டுதலுக்குரியது. உடலில் குறை என்று ஒரு போதும் தன்னை நினைக்காமல் விடா முயற்சி என்னும் வைராக்கியத்தோடு போராடி கோட்டயம் முதல் கோடம்பாக்கம் வரை தன் காந்தக் குரலோடு தன் முகத்தையும் பலர் அறிய வைத்த வைக்கம் விஜயலட்சுமியின் திறமை மென்மேலும் வளர வேண்டும். இவருக்கு கேரள அரசின் விருதுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் விருதுகளும் தேசிய விருதுகளும் உறுதியாக கிடைக்குமென்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்குவிப்போம்..

வாழ்த்துக்களுடன்

தினேஷ்...