நான் யமனானேன்..


எவன் செய்த கொடுமையாலோ
குடிபெயர்ந்த குருவியொன்று
என் வீட்டுக் கூரையிலே
தன் கூட்டினைத்தான் பின்னி வைத்து

தன் நெஞ்சம் நெகிழ்ந்திடவும்
தன்னினமும் வளர்ந்திடவும்
கருமுட்டையொன்றை அதிலிட்டு
அடைகாத்து வாழ்ந்துவர

அதை நானறியாது குப்பையென்று
குச்சி வைத்து தள்ளிவிட
குப்பென்று விழுந்த முட்டை
பட்டென்று சிதறிவிட

சட்டென்று பறந்த பட்சி
இமைப்பொழுதில் கண் மறைய.,
இப்படியும் நான் யமனானேன்
எருமை வண்டி யேறாமல்.