தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்

எப்போதும் போல் அல்லாமல் எனக்கு இந்த வருடம் பொங்கல் மிக்க மகிழ்ச்சியானதாகவே இருந்தது. அதற்குக் காரணம் காங்கயம் தமிழ்ச்சங்கம் மூலம் காங்கயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிதான். இன்னும் கூடுதல் சிறப்பாக நேற்று (15.01.14) மாலை நேர நிகழ்ச்சியில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புப் பேருரை இடம் பெற்றிருந்தது என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஆவணப்பட இயக்குநர் என்னும் ஒற்றை வரியில் மட்டும் கூறிவிட முடியாது. தமிழகத்தில் ஆகச்சிறந்த பேச்சாளர்களில், நான் மிகவும் மனதில் பதிவு செய்து வைத்துள்ள என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்றினால் சமூகத்தில் நடக்கும் அவல நிலைகளை தன் ஆவணப்படம் மூலம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பவர். இவரின் இராமையாவின் குடிசை, என்று தணியும், எனக்கு இல்லையா கல்வி இந்த மூன்று ஆவணப்படங்களும் சமூக நிலைகளை அப்படியே பிரதிபலித்த படங்கள்.

நான் இவரைப் பற்றி அறிந்து கொண்டது திரு.ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் வலைப்பூவில் தான். கடந்த ஆண்டு (2013) ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது பேச்சைக் கேட்டே ஆக வேண்டும் என்ற கூடுதல் ஆர்வம் என்னுள் கலந்துவிட்டது. அந்த விழாவில் அவர் நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரோட்டில் ஆகஸ்டு-2013 ல் உரை ஆற்றிய போது


காங்கயத்தில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை:

நேற்று காங்கயம் கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போது தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட எதையும் சொல்லாமல் நேரடியாக பாவேந்தரின் வரிகளும், சிறப்புரையின் தலைப்புமான தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தலைப்பைப் பெறுமைப்படுத்த பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றி பாரதி எழுதிய பாடல் ஒன்றினைச் சொல்லி தன் உரையைத் தொடங்கினார். இவர் பேச ஆரம்பித்தது முதலே பேச்சில் கருத்தாழம் மட்டுமல்ல நகைச்சுவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதை எளிதில் உணர முடிந்தது.

உலகில் 6000 பேச்சு மொழிகள் உள்ளன. அதில் 130 முதல் 140 மொழிகளே எழுத்து வடிவம் பெற்றுள்ளன. அதிலும் மிகவும் பழமையான மொழிகள் சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே. ஆங்கில மொழி தோன்றி வெறும் 400 வருடங்களே ஆகின்றன. ஆங்கிலம் படிப்பதைத் தவறென்று கூறவில்லை. மாறாக தமிழையும் சரியாக எழுதாமல் ஆங்கிலத்தையும் சரியாக எழுதாமல் இரண்டும் கெட்ட அவல நிலையில் எழுதுவதையும், பேசுவதையும்தான் சொல்ல மனம் கூசுகிறது. தகராறு என்ற வார்த்தையை எழுவதிலேயே இங்கு எத்தனை பேருக்குத் தகராறு இருக்கிறது. சிறிய , பெரிய என்று சொல்லிக் கொள்வதில் வல்லினமும் மெல்லினமும் மறந்து பலவீனம் ஆகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கும் மேல் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கூட இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுவதில்லை.

யாமறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி எழுதி இருக்கிறார் என்றால் வெறும் தமிழை மட்டும் கற்றுக் கொண்டு அவர் இதை சொல்லிவிட முடியாது. எழுத, படிக்க, பேச என மூன்று நிலைகளையும் கற்றுத் தேர்ந்தால் தான் எந்தவொரு மொழியையும் முழுமையாய்க் கற்றுத்தேர்ந்தவன் என்ற நிலையில் உணர முடியும். பாரதி அது போல 9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதனால்தான் அந்த வரிகளை அவரால் சொல்ல முடிந்தது, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவுநத்தைக்கும் சங்கிற்கும் ஈரறிவு, கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்றறிவு. நண்டுக்கும் வண்டுக்கும் நான்கறிவு, விலங்களுக்கு ஐந்தறிவு, ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு என்று மனிதனே வகுத்துக் கொண்டான் என்று அவர் பேசியதும் அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். தன் சிரிப்பான பேச்சின் மூலமும் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் தான் வினைச்சொல்லே தினையையும், பாலையும் கூறுகின்ற அற்புத மொழி. ஒன்றே முக்கால் அடிகளிலே அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ள திருக்குறள் பிறந்தது தமிழ் மொழியில். ஆனால் இன்றைய நிலையில் வழக்காடு மன்றம், வழிபாட்டுக்கூடம் மட்டுமல்ல வகுப்பறையிலும் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். காலம் காலமாய் இருந்து வந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் உள்ள கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதின் மூலம்தான் தமிழன் என்ற அடையாளத்தையும் நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் காக்க முடியும்.

 நேற்று (15.01.14) காங்கயத்தில் உரை ஆற்றிய போது


அம்மா. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர் மெய் எழுத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு அற்புத உணர்வு. இப்படி ஒரு சிறப்பு வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. நாம் கொண்டாடும் பொங்கல் வெறும் பண்டிகையோடு நின்று விடக்கூடாது. அது நம் பண்பாட்டின் அடையாளம். இயன்ற வரை பிறமொழி கலக்காமல் தமிழ் மொழியிலேயே பேசுவோம். தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பரந்த வாசிப்பும்தான் தமிழைக் காக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. பாவேந்தர் போல் தமிழை உயிருடன் ஒப்பிடுவதை விட வேறெந்த கௌரவமும் தமிழுக்கு செய்து விட முடியாது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர். அரங்கிற்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்த பணியினை சிறப்பாக செய்த அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.

உலகம் அறிந்து உணர வேண்டிய படைப்பாளிகளில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வளர்க அவர் தமிழ் மற்றும் சமூகப் பணிகள்..


திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் வலைப்பூ: உண்மை புதிதன்று


நன்றிகளுடன்:

தினேஷ்...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நிகழ்வை தொகுத்து வழங்கியமைக்கும், புதியதொரு தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

தினேஷ் பழனிசாமி said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி..
தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..

சீனு said...

சிறப்பானதொரு உரையை சிறப்பாக தொகுத்த உங்களுக்கு நன்றி தினேஷ், ஆங்கிலம் தமிழ் என்ற இரண்டுகெட்டான் நிலையில் தான் நாம் உள்ளோம்.. பார்க்கலாம் என்று திருந்தும் இந்நிலை என்று...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்