நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...


தமிழ் வலைப்பூக்களைப் பற்றி சென்ற வருடம் வரை எதுவுமே தெரியாத எனக்கு, இந்த வருடம் தான் இந்த வலைப்பூவைப் பற்றியும், அதிலில் நம் சொந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரியும். இருந்தாலும் சென்ற வருடம் எந்த பதிவையும் இடுகின்ற தகுதி எனக்கிருந்ததாக நான் யோசித்தே பார்த்ததில்லை.

இந்த வருடம் எனக்கு கொஞ்சம் முகநூலில் அதிகம் நட்புகள் கிடைத்ததாலும், அவர்களில் அதிக பேர் தமிழில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதையும் கவனித்து நானும் எதேச்சையாக முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து, பிறகு ஈரோடு கதிர் அண்ணன் எழுத்துக்களால் கொஞ்சம் அதிகமாகவே கவரப்பட்டு இந்த வலைப்பூவிற்குள் நானும் வந்தேன். மனக்குதிரை என்றும் தலைப்புமிட்டு எழுத ஆரம்பித்தேன். (இந்தக் குதிரைக்கு கடிவாளம் கிடையாது)

நானும் என் சொந்த எழுத்துகளை மட்டுமே எழுதுகின்றேன். இன்னும் இருபது பதிவுகளைக் கூடவும் தாண்டவில்லை (இதுதான் இருபதாவது பதிவு). ஆனாலும் நான் ஈரோடு புத்தகத் திருவிழா- துவக்க நாள் 03.08.13 என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவை அண்ணன் சதீஸ் சங்கவி அவர்கள் படித்துவிட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், நானும் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். எனக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே ஆச்சர்யம். நான் இது போன்ற விழாவிற்கு தகுதியானவன் தானா என்று மிகவும் யோசித்தேன். இருந்தாலும் என்னை எப்படியோ கண்டுபிடித்து அழைத்த அவருக்காகவே, விளம்பரதாரர்கள் சொல்வது போல் 99 % நான் வருவதாக அப்பொழுதே உத்திரவாதம் அளித்தேன்.

இருந்தாலும் நேற்று வரை கொஞ்சம் இரு மனதாகவே இருந்தேன். சதிஸ் சங்கவி அண்ணின் இந்த விழா தொடர்பான தகவல்களை அவர் வலைப்பூவில் படித்துக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் அதிகமே கவரப்பட்டு இன்று முழு மனதாக விழாவிற்கு செல்வதென்று முடிவும் செய்தேன். சென்னைக்கு சென்றாதாகவும் இருக்கட்டும், விழாவில் கலந்து கொண்டதாகவும் இருக்கட்டுமென்று அண்ணன் சதிஸ் சங்கவி அவர்களிடம் என் வருகையை உறுதி செய்தேன்.

நாளை மனது மாறினானும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று இன்றே இரயில் பயணத்திற்கான முன் பதிவையும் செய்து, மின்னணு பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டேன். நான் சென்னை சென்றது இதுவரை இரண்டு முறை. முதல் முறை நான் கல்லூரி படிக்கும் பொழுது (2008), இரண்டாவது முறை அலுவலக வேலையாக (2010). அதற்கும் மேல் இதுவரை எனக்கும் சென்னைக்கு வேலை இல்லை, என்னாலும் சென்னைக்கும் ஒரு வேலையும் இல்லை.

இந்த விழாவில் சேட்டைக்காரன் அவர்கள் எழுதிய மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற நூலும், சதீஸ் சங்கவி அவர்கள் எழுதிய இதழில் எழுதிய கவிதைகள் என்ற நூலும், மோகன்குமார் அவர்கள் எழுதிய வெற்றிக்கோடு என்ற நூலும் வெளியிடப்போவதாக விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படுள்ளது.





இப்பொழுது தான் மூன்றாவது முறையாக சென்னைக்கு அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்காக (01.09.13) செல்ல இருக்கின்றேன். நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே என்று மதியம் முதல் நிறைய பேரிடம் என் வாய் உளரிக்கொண்டே இருக்கின்றது...

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கடிவாளம் இல்லா குதிரையை காண ஆவலுடன் உள்ளேன்... சந்திப்போம்...!

தினேஷ் பழனிசாமி said...

கண்டிப்பா பார்த்து விடுவோம்...

sathishsangkavi.blogspot.com said...

வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...

veerakkumar.d said...

நல்ல எழுத்துப்பயிற்சி தொடருங்கள்.....வாழ்த்துகள்

-வீரா

Kanmani Rajan said...

சென்னையில் பார்க்கலாம் உங்க மூனாவது தடவைல, மொத தடவையா! :) :P

தினேஷ் பழனிசாமி said...

பின்னூட்டமிட்ட அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள்.. சென்னையில் நிச்சயம் சந்திப்போம்...

Unknown said...

இணைய சந்திப்புகளை
இருவிழியால் சந்திக்க
சிந்தித்திருந்த வேலையில்
தவிர்க்கமுடிய அலுவல்
சந்திக்க வருகிறது அந்நாளில் ......

முயற்சிக்கிறேன்
உங்கள் இதயக் கூட்டணியில்
இருகைகுலுக்கி
இருக்கையில் அமர ....

சதீஷ் மற்றும் நம்
நண்பர்களுக்கு
தம்பி நீ தவறமால்
அண்ணனின்
ஆசை வாழ்த்தை
பரிசளித்துவிடு ....

நூலில் அவர் கவிதை
நூலில் பட்டமாய்
சுவசக்காற்றடிக்கும்
திசையெல்லாம் பறக்க
சீர்த்தியின் வாழ்த்துக்கள்

வாழ்க சதீஷ்
வளர்க அவர் கவிகள்

கவிகள்
கவி கல் என
தூண்டியதால்
நீயும் கவிஞனாய்
வளர்வதுகண்டு
மகிழ்கிறேன் ....................

best compliments from
www.facebook.com/seerthik

சீர்த்தியின் கவிதைகள்